Select Location
All Locations
State
Region
City / District
கரப்பான்பூச்சி கட்சியின் போராட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க மறுத்த உயர் நீதிமன்றம்!

கரப்பான்பூச்சி கட்சியின் போராட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க மறுத்த உயர் நீதிமன்றம்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி சார்பில் வரும் ஜூன் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்தது. தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்தால் கோபமடைந்த இளைஞர்கள், அந்த வார்த்தையையே தங்களின் அடையாளமாக மாற்றி, கடந்த மே 16 ஆம் தேதி அபிஜித் திப்கே என்ற டிஜிட்டல் கிரியேட்டர் தலைமையில் 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி' (சிஜேபி) என்ற நையாண்டி பக்கத்தை முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் தொடங்கினர்.

அந்தக் கட்சி சில நாள்களுக்கு முன்பு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனைத் தீவிரப்படுத்தும் விதமாக அந்தக் கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே வரும் ஜூன் 6 ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருவதாகவும், நீட் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, போராட்டம் நடத்த இருப்பதாகவும் விடியோ வெளியிட்டிருந்தார். இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து “சேவ் இந்தியா ஃபவுண்டேஷன்” சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், பொதுவெளியில் கூட்டம் அதிகமாகக் கூடினால் கட்டுப்படுத்த இயலாது போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு போராட்டம் நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டும் என்று அந்த மனுதாரரர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் சௌரப் பானர்ஜி மற்றும் அமித் ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், இந்தியா வரும் அபிஜித் திப்கே ஏற்கெனவே, அமெரிக்காவிலிருந்து புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Dinamani 1 hour ago
Home Flash News