மலையாள சினிமாவின் அற்புதம்... பாலன் படத்தைப் பாராட்டிய சூர்யா!
நடிகர் சூர்யா இயக்குநர் சிதம்பரம் இயக்கிய பாலன் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார். இயக்குநர் சிதம்பரத்தின் இயக்கிய “பாலன் தி பாய்” திரைப்படம் ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முன்னணி கதாபாத்திரங்களில் ஆதிசேஷன், ஃபர்ஹானா பளதிங்கள் நடிக்க இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைத்த இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்தது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உருவாக்க ரீதியாகவும் திரை எழுத்தாகவும் நல்ல அனுபவத்தைக் கொடுத்ததாகப் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். முதல் நாளைவிட கூடுதல் டிக்கெட்கள் விற்பனையாகி வருவதால் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாகும் என்றே கணிக்கப்பட்டுள்ள்ளது. இந்த நிலையில், நடிகர் சூர்யா இப்படத்தைப் பார்த்தபின் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பாலன் திரைப்படம் பார்த்தேன். இன்னும் அதனையே யோசித்துக்கொண்டிருக்கிறேன். மஞ்சுமல் பாய்ஸ் போன்ற மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு, இப்படிப்பட்ட ஒரு படத்தைத் தேர்வு செய்திருப்பதே, இயக்குநர் சிதம்பரம் மற்றும் அவரது குழு ரசிகர்களுக்கு என்ன கொடுக்க விரும்பினர் என்பதை தெளிவாகச் சொல்கிறது.
இந்தப் படம், மலையாளத் திரையுலகிலிருந்து வந்த இன்னொரு அற்புதமான படைப்பு. ஜித்து மாதவன் எழுதிய இந்த வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து, அதையும் பெரும்பாலும் அறிமுக முகங்களைக் கொண்ட நடிகர் பட்டாளத்துடன் உருவாக்கிய இயக்குநருக்கு மிகுந்த மரியாதை.
ஃபர்சானா பலத்திங்கல், சிறுவர்கள் ஆதிசேஷன், முகம்மது ஜினான், மேலும் அப்பாஸ் கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய டொவினோ தாமஸ் அனைவரையும் கொண்டு இவ்வளவு கணிக்க முடியாத, வித்தியாசமான ஒரு படத்தை வெற்றிகரமாக உருவாக்கியிருக்கிறார்கள். நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை (சுஷின் ஷ்யாம்), கலை இயக்கம், ஒலியமைப்பு — ஒவ்வொரு தொழில்நுட்ப அம்சமும் சிறப்பாக இருந்தது. உண்மையாகவே இந்தப் படம் என்னை ஆழமாக பாதித்தது. குறிப்பாக இந்தப் புதிய முகங்களின் நடிப்பைப் பார்த்தபோது, நானும் என் நடிப்புத் திறன்களை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகை ஜோதிகாவும் இப்படத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். தற்போது, சூர்யா இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.