தவெகவில் இணைவதை உறுதிப்படுத்தினார் எம்.ஆர். விஜயபாஸ்கர்!
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசலால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்து செயல்படத் தொடங்கினர்.
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்ததால், எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்தவா்களின் கட்சிப் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்து நடவடிக்கை எடுத்திருந்தார். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையை அடுத்து, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அவரது தரப்பைச் சோ்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைந்தனர். முன்னாள் அமைச்சர்கள் விராலிமலை எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் இணையவில்லை.
அதைத்தொடர்ந்து, சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் இருவரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததுடன், சமீபத்தில் அதிமுகவில் இருந்தும் விலகினர். இந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக சி. விஜயபாஸ்கர் தெரிவித்திருந்த நிலையில், எம்.ஆர். விஜயபாஸ்கரும் இணையவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். “தமிழக வெற்றிக் கழகத்தில் நாளை முதல் என்னை இணைத்து எனது அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர உள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார்.