Select Location
All Locations
State
Region
City / District
அயர்லாந்தைக் குறைத்து மதிப்பிட்டதாக ஸ்ரேயஸ் அய்யர் ஒப்புதல்!

அயர்லாந்தைக் குறைத்து மதிப்பிட்டதாக ஸ்ரேயஸ் அய்யர் ஒப்புதல்!

அயர்லாந்து தொடருக்கு முன் 16 தொடர்களை தோல்வியே இல்லாமல் ஆடிவந்து டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி அயர்லாந்திடம் 2-0 என்று அதிர்ச்சித் தோல்வி தழுவியது எதனால் என்பது குறித்து கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் மனம் திறந்துள்ளார். அயர்லாந்து இவ்வளவு நன்றாக ஆடும் என்று எதிர்பார்க்கவில்லை என்று ஒரு கேப்டனாக ஸ்ரேயஸ் அய்யர் கூறுகிறார் என்றால் இவ்வளவு அதி நம்பிக்கைத் தேவையா? ஒரு கேப்டன் இப்படி நினைக்கலாமா? எந்த அணியையும் அதன் வலிமையான பகுதிகளுக்காக மதிக்கத்தானே வேண்டும் என்ற கேள்விகள் ஸ்ரேயஸ் அய்யரை நோக்கி எழும்பி வருகின்றன.

அயர்லாந்துக்கு எதிரான அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். 63 போட்டிகளுக்குப் பிறகு நேரடியாக கேப்டனாக அணிக்குத் திரும்பிய ஐயர், அந்தத் தொடரில் ஏற்பட்ட தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். “இது தர்மசங்கடமான தோல்வி அல்ல. ஆனால் எங்களுக்கு மிகவும் மனச்சோர்வை அளிக்கும் தோல்வியாக அமைந்தது. அயர்லாந்து அப்படி விளையாடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர். மைதானத்தின் பரிமாணங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர்களுக்கு தெளிவான திட்டம் இருந்தது. ஆனால் நாங்கள் மைதானம், பிட்ச் மற்றும் சூழ்நிலைகளை சரியாக ஆய்வு செய்து திட்டமிடுவதில் பின்தங்கிவிட்டோம். எனினும், அவர்களுக்கு முழு பாராட்டும் சேர வேண்டும். அந்தத் தொடரிலிருந்து நாங்கள் பல பாடங்களை கற்றுக்கொண்டோம்.

பெல்ஃபாஸ்ட் மைதானத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆடினோம். இது தோல்விக்கான காரணம் அல்ல. ஆனால் அங்கு சென்றவுடன் பிட்ச் மற்றும் வானிலைச் சூழல்களுக்கு எங்களை விரைவாகப் பழக்கப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவுட்பீல்டின் தன்மை மற்றும் மைதான சூழ்நிலைகளை சரியாக புரிந்துகொள்வதில் நாங்கள் சற்று தடுமாறினோம். அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் மைதானம் வழக்கமான கிரிக்கெட் ஸ்டேடியம் போல இல்லை. அவுட்பீல்டு சற்று மந்தமாகவும், சமநிலையற்றதாகவும் இருந்தது. மைதானத்தின் பரிமாணங்களும் சதுர வடிவில் இருந்ததால் கோணங்களை கணக்கிடுவதும், இரட்டை ரன்களைத் தடுப்பதும் சவாலாக இருந்தது. குறிப்பாக கேப்டனாக பீல்டிங் அமைப்பை வகுப்பது வழக்கத்திற்கு மாறான அனுபவமாக இருந்தது. ஐபிஎல் போட்டிகளில் எல்லா மைதானங்களும் ஒவ்வொரு திசையிலும் சமமான அமைப்பில் இருக்கும். அதனால் பெல்ஃபாஸ்ட் மைதானத்தின் தன்மை எங்களுக்கு சற்று கடினமான சவாலாக அமைந்தது,” என்று ஸ்ரேயஸ் அய்யர் விளக்கமளித்தார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News