அயோத்தி போலவே பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டு: விசாரணைக்கு உத்தரவு
டேராடூன்: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்பட்ட வழக்கு வேகமெடுத்துள்ள சூழலில் பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க கோயில் கமிட்டியினர் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களின் நிர்வாகக் கமிட்டி (பிகேடிசி) தலைவர் ஹேமந்த் துவேதி கூறியதாவது: கோயில் காணிக்கை திருட்டு தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவான குற்றச்சாட்டுகளை எங்கள் கமிட்டி தீவிரமானதாக கவனத்துக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க விராசரணை குழு அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளோம். கோயில் ஊழியர்களிடமும் விளக்கம் கேட்டுள்ளோம்.
இந்த விசாரணையில் யாரேனும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தால் நிச்சயம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என அவர் தெரிவித்தார். விசாரணை குழுவின் விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்கள், சிசிடிவி காட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் வாக்குமூலம் உள்ளிட்டவை கமிட்டியின் வசம் சமர்ப்பிக்கப்படும். அதில் தவறு செய்தது உறுதியானால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இந்த விசாரணை முடியும் வரையில் உறுதி செய்யப்படாத தகவல்களை பகிர வேண்டாம் என பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம் என பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களின் நிர்வாகக் கமிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி சோஹன் சிங் ரங்கட் கூறியுள்ளார். அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் மக்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ள நிலையில் பத்ரிநாத் கோயில் மீதும் அதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது கவனிக்கத்தக்கது.