"திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும்" - விசிக கூட்டத்தில் தீர்மானம்..
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.விசிக அமைச்சரின் துறையை மாற்றித் தருமாறும் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருமாறும் ஆட்சித் தலைமையிடம் விசிக எந்தவிதக் கோரிக்கையும் விடுக்கவில்லை என்று குறிப்பிட்ட திரு திருமாவளவன், சில ஊடகங்கள்தான் இதுபோன்ற தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்புவதாகச் சாடினார்.
தவெக ஆட்சிக்கு நீடித்த ஆதரவை வழங்குவதில் விசிக உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் இந்திய அரசின் முயற்சியைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இப்படி இருக்கையில் ஓமலூரில் நடைபெற்ற விசிக கூட்டத்தில், திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்றும், துணை முதலமைச்சராக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.திருச்சி கிழக்கில் போட்டியிடப்போவதில்லை என்று திருமாவளவன் ஏற்கெனவே விளக்கமாக கூறிவிட்டார். இப்படி இருக்கையில் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.