பாகிஸ்தானில் நிகழ்த்தபட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 30 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி
குவாடர்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் மாவட்டத்தில், கடலோர காவல் படை முகாம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தடைசெய்யப்பட்ட பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குவாடர் மாவட்டத்தின் ஜிவானி பகுதியில் உள்ள பாகிஸ்தான் கடலோர காவல் படை முகாம் மீது இந்த தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் படுகாயமடைந்து உள்ளனர். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிகிறது. இதனிடையே முதற்கட்ட விசாரணையில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்றின் மூலம் இந்த தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. அதேபோல இந்த தாக்குதலை தொடர்ந்து, ஆயுதமேந்திய சில நபர்கள் முகாமிற்குள் புகுந்து பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
பலுசிஸ்தானில் செயல்படும் பல பிரிவினைவாதக் குழுக்களில் ஒன்றான BLA, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக நீண்டகாலமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, அப்பகுதியின் கடற்கரை மற்றும் வளம் மிக்க பகுதிகளில் பாதுகாப்புப் படைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இவ்வமைப்பு அடிக்கடி பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.