வரலாற்றையே மாற்ற சிலர்தான் வருவார்கள்! முதல்வர் விஜய்க்கு சி. விஜயபாஸ்கர் புகழாரம்!
தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படத்தை முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பகிர்ந்துள்ளார். சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்த அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கா், எம்.ஆா். விஜயபாஸ்கா், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளா்மதி ஆகியோா் தங்களின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோருடன் கடந்த வியாழக்கிழமை நீா்வளத் துறை அமைச்சரும் தவெக பொதுச் செயலருமான என்.ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்வு, முதல்வரும் தவெக தலைவருமான விஜய் தலைமையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதிதாக தவெகவில் இணைந்தவர்களை முதல்வர் விஜய் சனிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து சி. விஜயபாஸ்கர் தெரிவித்திருப்பதாவது:
”வரலாறு எழுத பலர் வருவார்கள்… வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்! தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து, புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம்! வெற்றித் தலைவர் பாதையில்… மக்களுக்கான பயணம்… அதே உறுதியோடு தொடரும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.