Select Location
All Locations
State
Region
City / District
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்க முடக்கத்தை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்க முடக்கத்தை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) எக்ஸ் பக்க முடக்கத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) எக்ஸ் தளப் பக்கம் முடக்கப்பட்டிருந்த நிலையில் அதனை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா கணக்கு முடக்கப்பட்டதன் காரணத்தை நீதிமன்றத்தில் தெரிவித்த பின்னர், நீதிபதி ஸ்வரண காந்தா சர்மா இந்த உத்தரவைப் பிறப்பித்தார். நீட் மறுதேர்வை முன்னிட்டு, சிஜேபி வெளியிட்ட சில பதிவுகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததால் அவர்களின் எக்ஸ் பக்கத்தை முடக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மேத்தா தெரிவித்தார். மேலும், இப்போது தேர்வு முடிந்துவிட்டதால் அதுபற்றி கவலை இல்லை என்றும் அவர் கூறினார். பின்னர், சிஜேபி எக்ஸ் கணக்கு முடக்கத்தை நீக்க நீதிபதி ஷர்மா உத்தரவிட்டார். மேலும், கணக்கு முடக்கப்பட்டதற்கான காரணம் இனி பொருத்தமற்றது என்பதால் அதனை நீக்க உத்தரவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கரப்பான்பூச்சி மக்கள் கட்சி அரசைப் பகடி செய்யும் விதமாக தொடங்கப்பட்டது. ஆனால், வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் மற்றும் பெற்றோர் கொந்தளித்த நிலையில், சிஜேபி இளைஞர்களிடையே கவனம் பெற்றது. அக்கட்சியின் சமூக வலைதளப் பக்கங்கள் குறைந்த காலத்தில் அதிக கவனத்தையும், பின்பற்றுவோர் எண்ணிக்கையையும் பெற்று வந்த நிலையில் இந்தியாவில் அந்தக் கணக்குகள் மே மாதம் முடக்கப்பட்டன.

எக்ஸ் தளத்திடம் இந்த முடக்கம் குறித்து சிஜேபி கேள்வி எழுப்பிய போது, ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பிடமிருந்து சில கன்டெண்டுகளை நீக்கவேண்டியதற்கான முறையான கோரிக்கை வைக்கப்பட்டால் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருந்தது. எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டதும் ‘காக்ரோச் இஸ் பேக்’ என்ற பெயரில் மற்றொரு பக்கத்தை திறந்த சிஜேபி, தற்போது அதில் தொடர்ச்சியான அறிவிப்புகளை பகிர்ந்து வருகின்றனர். தற்போதைய நீதிமன்ற உத்தரவு சிஜேபி இயக்கத்திற்கு மட்டுமல்லாமல், கருத்து சுதந்திரம் மற்றும் டிஜிட்டல் உரிமைகளுக்கும் கிடைத்த ஒரு பெரிய வெற்றி என அதன் நிறுவனர் அபிஜீத் டிப்கே தெரிவித்துள்ளார்.


Dinamani 45 minutes ago
Home Flash News