லார்ட்ஸ் மைதானத்தின் முதல் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்! இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன!
கிரிக்கெட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் முதல்முறையாக மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. அங்கு, முதல் ஆண்கள் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டு 142 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக மகளிர் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகின்றது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 10 (நாளை) தொடங்குகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு ,ஆகஸ்ட் 4, 1976 ஆம் ஆண்டில் முதல்முறையாக ஒருநாள் மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதன்பின்னர், தற்போது முதன்முதலாக டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. அன்று லார்ட்ஸில் நடைபெற்றப் போட்டியில் இங்கிலாந்தின் கேப்டனாக இருந்தவர் மறைந்த ரேச்சல் ஹேஹோ ஃபிளின்ட். தற்போது வீராங்கனைகள் வெள்ளை அல்லது வண்ணக் பேண்ட்கள் அணிவது போலல்லாமல், அக்காலத்தில் ஸ்கர்ட் அணிந்து விளையாடிய போது அவர் முன்னணி வீராங்கனையாகத் திகழ்ந்தார்.
2017-ல் மறைந்த ரேச்சல் ஹேஹோ ஃபிளின் பெயர் லார்ட்ஸின் ஒரு வாயிலுக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் 5வது எண் வீராங்கணை மேகன் லயர் 1976 ஆம் ஆண்டு போட்டியை நிலவில் மனிதன் இறங்கியதுடன் ஒப்பிட்டு, ” லார்ட்ஸின் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் 1976-ஆம் ஆண்டு கால் பதித்தது, எங்களைப் போன்ற வீராங்கனைகளுக்கு சிறிய அடியாக இருந்தாலும், அது மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை நோக்கிய ஒரு மாபெரும் பாய்ச்சலாக இருந்தது” என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருப்பார். மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஞாயிறன்று ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஒரு வாரத்திற்குள் லார்ட்ஸில் இரண்டாவது போட்டியாக இந்த டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
இங்கிலாந்து கேப்டன் நாட் சிவர்-பிரன்ட் உள்பட இங்கிலாந்தின் உலகக் கோப்பை அணியில் உள்ள 9 வீராங்கணைகள் இந்த டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணிக்கு நாட் ஷிவர்-பிரண்ட் மற்றும் இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன்களாகச் செயல்படுவார்கள். இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் தொடங்கும் முன்பு, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்கள் 50 பேர் இணைந்து லார்ட்ஸ் மைதானத்தின் புகழ்பெற்ற 'ஐந்து நிமிட மணியை' ஒலித்து ஆட்டத்தைத் தொடங்கி வைக்கவுள்ளனர்.