எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் தேவையில்லையா.! ஹைட்ரஜன் தான் எதிர்காலம்.. ஒன்றிய அமைச்சர் கருத்து
டெல்லி: ஹைட்ரஜன் தான் இந்திய போக்குவரத்து துறையின் எதிர்காலம் என்று ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதிபட தெரிவித்து உள்ளார். சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த எரிபொருள் மாற்றத்தை ஊக்குவிக்க, தற்போது இந்தியாவின் 10 முக்கிய வழித்தடங்களில் ஹைட்ரஜன் வாகனங்களின் சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறி இருக்கிறார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, புனே-மும்பை, கிரேட்டர் நொய்டா-டெல்லி-ஆக்ரா, அகமதாபாத்-வதோதரா-சூரத் மற்றும் திருவனந்தபுரம்-கொச்சி உள்ளிட்ட இந்தியாவின் 10 முக்கிய நெடுஞ்சாலைகளில் இந்த முன்னோடி சோதனைகதிட்டங்கள் தீவிரமாக நடந்து வருவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நம் நாட்டினுடைய போக்குவரத்துத் துறையின் எதிர்காலம் ஹைட்ரஜன் எரிபொருள் தான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனவே அதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம் என்றார். மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருள் (biofuel) தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் நம் நாட்டின் வாகனத் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருகிறது. புத்தாக்கம் மற்றும் செலவுச் சிக்கனத் திறன் ஆகிய இரண்டிலும் இந்தியா உலக அளவில் முன்னணியில் திகழும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.