Select Location
All Locations
State
Region
City / District
பழநி முருகன் கோயிலுக்கு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.1,414 கோடி வருவாய்!

பழநி முருகன் கோயிலுக்கு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.1,414 கோடி வருவாய்!

பழநி: பல்வேறு கட்டண சேவைகள், நன்கொடைகள், சொத்துக்கள் மூலம் பழநி முருகன் கோயிலுக்கு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.1414 கோடி வருவாயாக கிடைத்துள்ளது. அதில், 28 கட்டணமில்லா சேவைகளுக்காக ரூ.145.26 கோடி செலவிடப்பட்டுள்ளது என கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து பழநி முருகன் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து விவரிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் இலவச மற்றும் கட்டண சேவைகளை வழங்கி வருகிறது. அதில், சிறப்பு கட்டண தரிசனம், அபிஷேகம், அர்ச்சனை, தங்கத் தொட்டில் பிராத்தனை, பூஜை பொருட்கள் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிராசதம் விற்பனை, நன்கொடைகள், சொத்துக்கள், முதலீட்டு வட்டி, தங்கும் விடுதி வாடகை என 33 இனங்கள் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் கோயிலுக்கு ரூ.1414.83 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.353.89 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக ரூ.50 கோடி முதல் ரூ.70 கோடி வரை வருமானம் அதிகரித்துள்ளது. 2020-21-ல் ரூ.110.61 கோடியாக இருந்த ஆண்டு வருமானம், 5 ஆண்டுகளுக்கு பிறகு 2 மடங்கு அதிகரித்து (ரூ.243.28 கோடி ) அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பக்தர்கள் நலன் கருதி நாள் முழுவதும் அன்னதானம் மற்றும் பிரசாதம், குழந்தைகளுக்கு காய்ச்சிய பால், தேவஸ்தான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 2 வேளை உணவு, மாற்றுத்திறனாளிகளுக்கு ரோப் கார் மற்றும் வின்ச் ரயிலில் இலவசமாக பயணிக்க வசதி உட்பட 28 கட்டணமில்லா சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.145.26 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் பயன் அடைந்துள்ளனர்,” என்றார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News