Select Location
All Locations
State
Region
City / District
பள்ளிக்கூடம் கல்விக்காக, அரசியலுக்காக அல்ல - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி

பள்ளிக்கூடம் கல்விக்காக, அரசியலுக்காக அல்ல - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி

அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கிய நிகழ்ச்சி, அரசு விழா மற்றும் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆகியவை கரூரில் நேற்று நடைபெற்றது.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

முதலமைச்சர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப் பள்ளி வகுப்பறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

இதுதொடர்பாக, தொடக்கக் கல்வித்துறை விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிக்கையில், அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது. இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு. இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். விசாரணையில், பள்ளித் தலைமையாசிரியர் தன்னிச்சையாக முடிவு செய்து, துறை உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

ஒழுங்கு நடவடிக்கை

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஒரு காணொளி குறித்தும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. “கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை” என்ற முதல்வரின் ஆணையை நாங்கள் தொடர்ந்து உறுதியாக கடைப்பிடிப்போம். பள்ளிக்கூடம் கல்விக்காக, அரசியலுக்காக அல்ல என்பதே பள்ளிக்கல்வித் துறையின் தெளிவான கொள்கையாகும். இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையாக அறிவுறுத்துக்கிறேன். எனதருமை ஆசிரியர்களே.. கல்விச் சூழலைக் காப்பதும், கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையை பாதுகாப்பதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Malaimalar 1 hour ago
Home Flash News