முதலமைச்சர் விஜயின் ஆட்சி இதுவரை நல்லா இல்லை...ஓபனாக பேசிய சாலமன் பாப்பையா..!
மதுரை தனக்கன்குளம் பகுதியில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து தனக்குச் சொந்தமான இடத்தில் புதிய நூலகம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த நூலகத்தின் திறப்பு விழா நடைபெற்ற நிலையில், இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்த பின் சாலமன் பாப்பையா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், “தமிழகத்தில் தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடு மற்றும் தவெக ஆட்சியின் நிர்வாகம் எப்படி உள்ளது?” என்று எழுப்பிய கேள்விக்கு, சற்றும் யோசிக்காமல் தனது அதிருப்தியை அவர் ஓப்பனாகப் பதிவு செய்தார்.
"இதுவரைக்கும் TVK ஓட ஆட்சி நல்லா இல்ல,அவர்களோட செயல் -பாடுகள் சரியில்லை இதுக்கு அப்புறம் நல்லது பண்ணுவாங்களா இல்ல பண்ண மாட்டாங்களானு பொறுத்திருந்துதான் பாக்கணும் எப்படி இருக்குனு “என்று தன்னுடைய கருத்தை பகிரங்கமாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய சாலமன் பாப்பையா, மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையைத் தான் ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்றும், தமிழகத்திற்கு இருமொழிக் கொள்கையே போதுமானது என்றும் திட்டவட்டமாகக் கூறினார். மும்மொழிக் கொள்கையானது எதிர்காலத்தில் மற்றொரு மொழியைத் திணிப்பதற்கான வழியாகவே அமையக்கூடும் என்று எச்சரித்த அவர், தற்போதைய சமுதாயத்தில் பணத்தின் ஆதிக்கமும், அனைத்து நிலைகளிலும் லஞ்சமும் பெருமளவில் அதிகரித்திருப்பது ஒழுக்க மற்றும் பண்பாட்டு மதிப்புகள் குறைவதற்குக் காரணமாக உள்ளதாக வேதனை தெரிவித்தார். தவெக அரசு மீது மூத்த தமிழறிஞர் ஒருவர் முன்வைத்துள்ள இந்த நேரடி விமர்சனம் ஆளுங்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியினரான திமுக மற்றும் அதிமுகவினர் சாலமன் பாப்பையாவின் இந்த விமர்சனத்தை சமூக வலைத்தளங்களில் தங்களுக்குச் சாதகமாகப் பகிர்ந்து வரும் நிலையில், தவெக ஆதரவாளர்கள் புதிய அரசுக்குக் கூடுதல் அவகாசம் தேவை என்று தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது கடுமையான அனலை கிளப்பியுள்ளது.