ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின்
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸை வீழத்தி ஸ்பெயின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் டல்லாஸ் நகரில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீரர் ஒயார்சபால் கோலாக மாற்றினார்.
இதனால் ஸ்பெயின் அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. ஆனால் தொடர்ந்து போராடிய பிரான்ஸ் அணியால் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது. இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 58ஆவது நிமிடத்தில் பெட்ரோ போரோ கோல் அடித்து ஸ்பெயின் அணியை 2 -0 என்ற கணக்கில் மேலும் முன்னிலைப் பெற வைத்தார். இரண்டாவது பாதியிலும் எவ்வளவு முயற்சித்தும் பிரான்ஸ் வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கடைசியாக ஸ்பெயின் அணி 2010ல் உலகக் கோப்பையை வென்றிருந்தது. அதுதான் அந்த அணி கடைசியாக அரையிறுதிக்கு முன்னேறியிருந்த உலகக் கோப்பையாக இருந்தது. தற்போது, 16 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனை அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.