பழநியில் ரோப்கார் 45 நாள் நிறுத்தம்
பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்காக 3 வின்ச்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 3வது வின்ச்சில் பொருத்தப்பட்டிருந்த இரும்புக்கயிறின் கால அளவு நிறைவடைந்ததால் புதிய இரும்புக்கயிறு பொருத்தும் பணி முடிந்து நேற்று மாலை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், பழநி மலைக்கோயிலில் ரோப்காரின் பயண நேரம் 3 நிமிடமாகும். 1 மணி நேரத்தில் சுமார் 450 பேர் பயணிக்கலாம். இந்த ரோப்காரில் ஜூலை 20ம் தேதி முதல் வருடாந்திர பராமரிப்பு பணி துவங்குகிறது. எனவே அன்று துவங்கி சுமார் 45 நாட்களுக்கு ரோப்கார் இயங்காது. மலைக்கோயில் செல்லும் பக்தர்கள் வின்ச் மற்றும் படிப்பாதையை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.