எதிர்காலம் நசுக்கப்படுகிறது... வைரலாகும் டொவினோ தாமஸின் பதிவு!
நடிகர் டொவினோ தாமஸ் தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இளைஞர்களுடன் போராட்டம் நடத்தி வருகிறது.
நேற்று (ஜூலை 20) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய போது, ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் அமைதிப் பேரணி நடத்தியபோது காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தி பின்னர் இருதரப்புக்கும் மோதல் ஏற்படவே காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கண்ணீர் புகை குண்டு மற்றும் லத்திகளால் தாக்கப்பட்டதால் பலர் காயமடைந்தனர். இருப்பினும், சிஜேபியினர் உறுதியாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் டொவினோ தாமஸ் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சரி, தவறு என்பவை சில நேரங்களில் மாறுபடக்கூடியவையாக இருக்கலாம். ஆனால், ஒரு அமைதியான போராட்டத்தை கையாளும் முறை இது அல்ல. நாட்டின் எதிர்கால தலைமுறையினர் தங்கள் குரலை உயர்த்தும் போது, அந்தக் குரல்களுக்கு அடக்குமுறை சக்தியால் பதில் அளிக்கப்பட்டால், மிதிக்கப்படுவது எதிர்காலம்தான். இதனால், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையே சிதைந்து போகிறது. இந்த மாணவர்கள் என்ன தவறு செய்தார்கள்? சொத்துகளைச் சேதப்படுத்தினார்களா? வன்முறையில் ஈடுபட்டார்களா? இதைப்போன்ற நடவடிக்கைகளுக்கு அவர்கள் தகுதியானவர்கள் எனச் சொல்லும் அளவிற்கு அவர்கள் செய்தது என்ன?
நமது நாட்டின் எந்தப் பகுதியாக இருந்தாலும், நியாயமான காரணத்திற்காக அமைதியான முறையில் போராடும் ஒவ்வொரு நபருக்கும் என் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தும் உரிமை என்பது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் அல்ல; மாறாக அது ஜனநாயகத்தின் அடித்தளங்களில் ஒன்றாகும். எனது தேசப்பற்று குறித்து கேள்வி எழுப்பப் போகிறவர்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன்; உங்களை விட என்னை நான் நன்றாக அறிவேன். இது அரசியலைத் தாண்டியது; மதம் மற்றும் அனைத்து விதமான பிரிவினைகளையும் தாண்டியது. எனது அரசியல் மனிதநேயம். எனது நம்பிக்கை அமைதி.” எனத் தெரிவித்துள்ளார். நடிகர் டொவினோ தாமஸ் முதல் நடிகராகக் குரல் கொடுத்துள்ளதால் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.