Select Location
All Locations
State
Region
City / District
ரேவதி, அதிதி ராவ்... சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் நடிகர்கள்!

ரேவதி, அதிதி ராவ்... சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் நடிகர்கள்!

தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு தமிழ் உள்பட தென்னிந்திய நடிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேர்வு முறையில் சீர்திருத்தம் வேண்டி, நாடாளுமன்றம் நோக்கிச் சென்ற பேரணியில் இளைஞர்கள், மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் பிரகாஷ் ராஜ், பாலிவுட் நடிகைகள் சபானா ஆஸ்மி, பூனம் பாண்டே, மலையாள நடிகைகள் ரஞ்சனி ஹரிதாஸ், ஷிஜா ரோஸ் ஆகியோர் ஜந்தர் மந்தரில் இளைஞர்களுடன் களத்தில் இருந்து அரசுக்கு எதிராகத் தங்கல் குரலைப் பதிவு செய்தனர். இதேபோன்று தென்னிந்திய நடிகர்கள் பலரும் இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

நடிகை ரேவதி

முறையாகத் தேர்வு நடத்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சமூக வலைதளப் பக்கத்தில் கடும் கண்டனத்தை ரேவதி பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது: மாறுபட்ட கருத்துகளை வெளிப்படுத்தன் ஒரு வடிவம்தான் போராட்டம். அது அமைதியான வழியில் நடக்கிறது. கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதனை காதுகொடுத்து கேட்க வேண்டும்; அது குறித்து விவாதிக்க வேண்டும். அமைதியாக இருக்கக் கூடாது. அடக்குமுறையிலும் ஈடுபடக் கூடாது. குழந்தைகள் அவர்களின் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். அதனைக் கேளுங்கள். பேசுங்கள். அவர்களை அடித்து விரட்டாதீர்கள். சோனம் வாங்சுக் மற்றும் மாணவர்களுடன் நான் ஆதரவாக நிற்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

அதிதி ராவ்

அரசியல் விருப்பங்கள் எதுவாக இருந்தாலும், மனிதாபிமானமே முதன்மையானதாக இருக்க வேண்டும் என மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு நடிகை அதிதி ராவ் ஹைதாரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: "எவருடைய அரசியல் விருப்பங்கள் எதுவாக இருந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானதாக இருக்க வேண்டும். ஆக்கபூர்வமான உரையாடலுக்கான உண்மையான அர்ப்பணிப்புடன் நாம் இருக்க வேண்டும். நமது துணிச்சலான மாணவர்களின் கருத்துகள் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் மரியாதை, கண்ணியம் மற்றும் அனுதாபம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு பாதுகாப்பான சூழலை நாம் உறுதி செய்ய வேண்டும். நமது மாணவர்களே நமது எதிர்காலம்" எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சித்தார்த்

அரசாங்கத்தை நோக்கி சரியான மற்றும் நியாயமான கேள்விகளை எழுப்பும் ஒவ்வொரு மாணவர் மீதும் மரியாதை கூடியுள்ளதாகவும் அவர்களுக்கு அன்பும் ஆதரவும் என்றுமே இருக்கும் என நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார். மேலும், தைரியம் என்பது பயம் இல்லாத நிலை அல்ல; பயத்தை எதிர்ப்பதும் அதை வெல்வதுமே ஆகும் என அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைன் கூறிய கருத்தையும் பதிவிட்டு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பா. ரஞ்சித்

தில்லியில் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததற்கு இயக்குநர் பா. ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது: ''ஜந்தர் மந்தரில் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதும், 21வது நாள் உண்ணாவிரதத்தில் சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக காவல் துறை அழைத்துச் சென்றததும் வருத்தம் அளிக்கிறது'' என இயக்குநர் பா. ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.

நடிகை ரஞ்சனி ஹரிதாஸ்

மலையாள நடிகையான ரஞ்சனி ஹரிதாஸ் சக நடிகையான ஷிஜா ரோஸ் உடன் ஜந்தர் மந்தரில் இளைஞர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களுடன் பேசிய நடிகை ரஞ்சனி ஹரிதாஸ், அமைதியான வழியில் நடக்கும் போராட்டம் ஒருபோதும் அடக்குமுறைக்குள்ளாக்கப்படக் கூடாது. மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் மதிக்கப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கூறினார். இதேபோன்று பாலிவுட் நடிகைகளான பூனம் பாண்டே, சபானா ஆஸ்மி ஆகியோரும் போராட்டக் களத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.


Dinamani 3 hours ago
Home Flash News