பாமகவின் தலைவராக தன்னை அறிவிக்கக்கோரிய மனுவை திரும்பப் பெற்றார் ராமதாஸ்
சென்னை: பாமக தலைவராக தன்னை அறிவிக்கக் கோரிய மனுவை ராமதாஸ் திரும்பப் பெற்றார். பிரச்சனை சுமுகமாக தீர்த்துக் கொண்டதால் வழக்கை திரும்பப் பெறுவதாக உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு தெரிவிக்கப்பட்டது. ராமதாஸ் மனுவை வாபஸ் பெற்றதை அடுத்து மனுவை முடித்துவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமகவில் தந்தை மகனிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கட்சியானது இரண்டு அணியாக செயல்பட்டு வந்தது. எனவே பாமகவின் பெயர், கோடி, சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரியம் பாமக கட்சின் தலைவராக தன்னை அறிவிக்க கோரியும் பாமக நிறுவனர் ச.ராமதாஸ் தரப்பில் இருந்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே இருந்து வந்த தந்தை - மகன் மோதல் அண்மையில் முடிவுக்கு வந்தது. ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியின் 61-வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, அன்புமணி தன்னுடைய குடும்பத்துடன் வந்து பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்றுச் சென்றார்.
இந்த நிலையில், பாமக தலைவராகத் தன்னை அறிவிக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தங்களுக்குள்ளான பிரச்னையை சுமுகமாக தீர்த்துக் கொண்டதாகவும், வழக்கை திரும்ப பெருவதாகவும் மனு தாக்கல் செய்தார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதித்து, வழக்கை முடித்து வைத்தது.