மாணவர்கள் போராட்டம் துணிச்சலையும் வீரத்தையும் வெளிப்படுத்துகிறது! சிஜேபிக்கு சல்மான் கான் ஆதரவு!
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) போராட்டத்துக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆதரவு தெரிவித்துள்ளார். நீட் தேட்வில் நிகழ்ந்த குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் ஒரு முன்னெடுப்பாக கடந்த திங்கள்கிழமை (ஜூலை 20) நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்த முயன்ற சிஜேபி ஆதரவாளர்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சிஜேபி போராட்டத்துக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பல தரப்பிலிருந்தும் ஆதரவு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சல்மான் கான் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“அமைதியாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது மிகுந்த வருத்தமளிக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வினாத்தாள் கசிவு என்பது மிக முக்கியமான ஒரு பிரச்னை. சிறந்த கல்வி முறைக்காக நம் நாட்டு மாணவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதையும், அதற்கு அவர்களது பெற்றோர்கள் ஆதரவளிப்பதையும் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடினமாகப் படித்துத் தங்கள் எதிர்காலத்தையும், சிறந்த மற்றும் கல்வியறிவு மிக்க இந்தியாவையும் உருவாக்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் ஆர்வத்துடன் அவர்கள் எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டை நான் மனதாரப் பாராட்டுகிறேன். இந்தப் போராட்டம் சரியான அணுகுமுறை. மாணவர்கள் இதை அமைதியான முறையில் முன்னெடுத்துள்ளனர். இது மிகுந்த துணிச்சலையும் வீரத்தையும் வெளிப்படுத்துகிறது. கல்வியின் மீது மிகுந்த ஆர்வமும் உத்வேகமும் கொண்ட இந்தத் தலைமுறை இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும். இது மாணவர்களுக்கும் கல்வி முறைக்கும் இடையிலான ஒரு விவகாரம். இதை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது. இதற்கான முழுப் பெருமையும் நம் நாட்டு மாணவர்களையே சாரும். அரசு அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அளித்து, கல்வி முறையை மேலும் வலுப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் ஒரு சூழலாகும். ஒரு நல்ல முடிவுக்காக நான் நம்பிக்கையுடனும் பிரார்த்தனையுடனும் காத்திருக்கிறேன். கல்வி கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் இறைவனின் ஆசி கிடைக்கட்டும்.
கல்வி என்பது கலாச்சாரமாக மாற வேண்டும். வெளிநாட்டினர் கல்வி பயில இந்தியாவுக்கு வரும் நிலையும், இந்தியா ஒரு முக்கியக் கல்வி மையமாக மாறும் நிலையும் உருவாக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.