நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் எதிரெதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜிநாமா செய்யக் கோரி போராடிய சிஜேபி கட்சியின் இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தினர். மேலும், மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, தர்மேந்திர பிரதானை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடி இல்லத்துக்கு வெளியே செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், தர்மேந்திர பிரதானை ராஜிநாமா செய்ய வலியுறுத்தியும் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையில், பிரதமரின் இல்லத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு கண்டனம் தெரிவித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களும் போட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.