Select Location
All Locations
State
Region
City / District
நீட் போராட்டங்களில் கைதான சிறுவர்கள், குற்றப் பின்னணி இல்லாதோரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் போராட்டங்களில் கைதான சிறுவர்கள், குற்றப் பின்னணி இல்லாதோரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நீட் போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களையும், குற்றப் பின்னணி இல்லாத நபர்களையும் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதில், தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனிடையே, கடந்த 20-ம் தேதி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபியினர் பேரணியாகச் சென்றனர். அப்போது, அவர்களுக்கும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டனர். டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு ஆதரவாக மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம், அசாம் என பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டங்களின்போது வன்முறையில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டனர். பிஹாரில் போராட்டக்காரர்கள் மீது ஏகே 47 ரக துப்பாக்கியைக் கொண்டு காவலர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

வன்முறையில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய விசாரணையின்போது, ‘நீட் போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களையும், குற்றப் பின்னணி இல்லாத நபர்களையும் விடுவிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ‘போராட்டங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள், ட்ரோன் காட்சிகள், கேமரா பதிவுகள், ஒயர்லெஸ் தகவல் தொடர்புகள், பிற டிஜிட்டல் ஆதாரங்களை பாதுகாத்து வையுங்கள். இத்தகைய ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டாம்’ என்று அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சுதந்திரமான விசாரணையை நடத்துவதில் மத்திய அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மனுதாரர்களில் சிலர், காவல் துறை கொடூரமான பலப்பிரயோகம் செய்ததாகவும் கூறுகின்றனர். அது உண்மையாக இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஓர் உண்மை இருக்கிறது, மற்றொரு உண்மை இருக்கிறது, அதற்கும் அப்பால் உண்மையான உண்மை ஒன்று இருக்கிறது.

கடுமையான குற்றவாளிகள், சமூக விரோதிகள், அழைப்பு விடுக்கப்படாத நபர்கள் போராட்டக்களங்களுக்குள் நுழைந்து காவலர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். மாணவர்கள் காவல் துறையை தாக்குவார்கள் என்று நாங்கள் கருதவில்லை” என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், “மனுதாரர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள், தற்போதைய நிலையில் ஒரு சுதந்திரமான, பாரபட்சமற்ற விசாரணைக்கான முகாந்திரத்தை ஏற்படுத்துகின்றன. இந்த விசாரணை, காவலர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவங்களையும் விசாரிப்பதை உள்ளடக்கியதாக இருக்கும்” என தெரிவித்தது. இதற்கான விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு முன்பாக, மத்திய அரசு, டெல்லி தலைநகர் பிரதேசம், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பதில்களைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் அளித்தது. பிஹார், மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு பதில்கள் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களின் பதில்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழக்கு விசாரணை தொடரும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Hindu Tamil 55 minutes ago
Home Flash News