Select Location
All Locations
State
Region
City / District
நீட் போராட்டம்: காங்கிரஸ் ஆளும் கேரளத்தில் 5,000 பேர் மீது வழக்கு ஏன்? பினராயி விஜயன் கேள்வி!

நீட் போராட்டம்: காங்கிரஸ் ஆளும் கேரளத்தில் 5,000 பேர் மீது வழக்கு ஏன்? பினராயி விஜயன் கேள்வி!

கேரளத்தில் போராடிய 5,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக் குற்றம் சாட்டி காங்கிரஸ் அரசை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

போராட்டத்தின் போது சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதன் பிறகு போராட்டம் நாடு முழுவதும் வெடித்தது. தர்மேந்திர பிரதானின் ராஜிநாமைவையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளதாவது: உண்மையிலேயே, மாணவர்களின் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறதா? ஜந்தர் மந்தரில் போராடியவர்களுக்கு ஆதரவாக கேரளத்தில் போராடிய 5,000 பேர் மீது குற்றவியல் வழக்குகளை பதிவு செய்துள்ளது அம்மாநில அரசு. என்ன ஒரு பாசாங்குத்தனமான நிலைப்பாடு?

போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற மத்திய அரசே ஒப்புக் கொண்ட பிறகும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அவற்றை தொடர்ந்து நடத்தி வருகிறது. மாணவர்கள் மீது உங்களுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், கேரள அரசு பதிவு செய்த வழக்குகளை திரும்பப்பெற ராகுல்காந்தி உத்தரவிட வேண்டும். ஜனநாயகத்தில் கேரளத்துக்கும் தில்லிக்கும் வெவ்வேறு நிலைப்பாடா? என்று பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.


Dinamani 52 minutes ago
Home Flash News