மினிமம் பேலன்ஸுகாக 2026-ல் வாடிக்கையாளர்களிடம் ரூ.7,000 கோடி அபராதம் வசூலித்த வங்கிகள்!
புதுடெல்லி: குறைந்தபட்ச இருப்பு அளவை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து 2025-26-ம் நிதியாண்டில் சுமார் ரூ.7,000 கோடியை வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளன. மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: இந்திய ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, 2025-26-ம் நிதியாண்டில் தங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு அளவை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் ரூ.7,000 கோடிக்கும் அதிகமான தொகையை அபராதமாக வசூலித்துள்ளன. இதில் பொதுத்துறை வங்கிகள் ரூ.2,137.92 கோடியையும் தனியார் வங்கிகள் ரூ.4,948.71 கோடியையும் வசூலித்துள்ளன.
தனியார் வங்கிகளில் அதிகபட்சமாக ஹெச்டிஎஃப்சி வங்கி ரூ.1,798.14 கோடியும், அதைத் தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி ரூ.1,081.33 கோடியும் வசூலித்துள்ளன. இந்த 2 வங்கிகளும் சேர்ந்து ரூ.2,879.47 கோடியை வசூலித்துள்ளன. இது, 19 தனியார் வங்கிகள் வசூலித்த மொத்த கட்டணத்தில் 58% ஆகும். பிரதமரின் ஜன் தன் யோஜனா கணக்குகள் உட்பட அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்குகளுக்கு இத்தகைய அபராதக் கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் நிதிநிலை குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது. வலுவான இருப்புநிலைக் குறிப்புகள், சாதனை அளவிலான லாபம் மற்றும் மொத்த வாராக் கடன்கள் குறைந்திருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.