Select Location
All Locations
State
Region
City / District
5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட ஆக.24 வரை தடை நீட்டிப்பு

5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட ஆக.24 வரை தடை நீட்டிப்பு

சென்னை: திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட விதிக்கப்பட்ட தடையை ஆக.24 வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதிக்கான எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பி்ன்னர் தவெகவில் இணைந்த விராலிமலை சி.விஜய பாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். தேர்தல் வழக்கு இந்த 5 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து ஏற்கெனவே தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடக்கூடாது என தடை கோரி, பாளையங் கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு, இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடக்கூடாது என இடைக்காலத்தடை விதித்தும், சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்கவும் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஆக.24-க்கு தள்ளிவைப்பு

அதையடுத்து நீதிபதிகள், ஏற்கெனவே இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டித்து விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News