Select Location
All Locations
State
Region
City / District
LIVE
முக்கிய பிரச்னைகளை விவாதிக்க மோடியும், அமித் ஷாவும் அவைக்கு வராதது ஏன்?

முக்கிய பிரச்னைகளை விவாதிக்க மோடியும், அமித் ஷாவும் அவைக்கு வராதது ஏன்? எதிர்கட்சிகள் பேரணியாக சென்று போராட்டம்

புதுடெல்லி: ஜந்தர் மந்தர் தடியடி, அயோத்தி நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர், ஒன்றிய உள் துறை அமைச்சர் பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவையும் ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை நிதி முறைகேடு மற்றும் ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகளை வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்ணா ஸ்தலில் இருந்து மகர் த்வார் வரை காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. அவர்கள் அவைக்கு வந்து அறிக்கை அளித்தால் விவாதிக்க தயாராக உள்ளோம். விவாதத்தின் மூலமே தீர்வு கிடைக்கும். அவை கூடி பல நாட்கள் ஆகியும் அவர்கள் வராதது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்’ என்று கூறினார். தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகோய், ‘நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமர் பேச வேண்டும். இரு உயர் தலைவர்களும் அவைக்கு வராமல் பொறுப்புத் துறப்பது வருந்தத்தக்கது’ என்று தெரிவித்தார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வத்ரா, மாணவர் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய வன்முறை தாக்குதலுக்கு ஒன்றிய அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார். அவர் பேசுகையில், ‘பொதுப் பதவியில் இருப்பவர்கள் இளைஞர்கள் மீது பலத்தைப் பயன்படுத்த உத்தரவிட்டதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்தவும் பெல்ட் குண்டுகளை பயன்படுத்தவும் உத்தரவிட்டது யார் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என்று கூறினார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளில் இந்த போராட்டத்தால் அவை நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் அவை நடவடிக்கைகள் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Dinakaran 2 hours ago
Home Flash News