பலியானவர்கள் 27 ஆக உயர்வு; கேரளத்தில் இன்றும் கனமழை: 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
திருவனந்தபுரம்: கேரளத்தில் இன்றும் கனமழை தொடர்கிறது. இன்று 2 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கேரளத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழை இன்றும் தொடர்கிறது. இன்று ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், ஏனைய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று திருச்சூர், இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம் உள்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களில் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. 4 பேரை காணவில்லை. 418 முகாம்களில் 18,434 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு அபாயம் உள்ள வயநாடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் இங்கு உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இரவு நேரங்களில் மலையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வயநாடு மாவட்ட கலெக்டர் மேகஸ்ரீதெரிவித்துள்ளார். கோழிக்கோடு-வயநாடு, கண்ணூர்-வயநாடு இடையே உள்ள மலைப்பாதைகளில் இரவு நேர பயணத்திற்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.