3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் போராட்டம்
சேலம்: 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய பணியிடங்களை தோற்றுவிக்காமல், ஏற்கனவே உள்ள பணியிடங்களை பணி நிரவல் செய்வதை கண்டித்தும், பணி நிரவல் ஆணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசில் பணிபுரியும் செவிலியர்களுக்கு இருப்பது போல் செவிலியர் என்ற பெயரை செவிலியர் அலுவலர் என மாற்ற வேண்டும், 10 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் செவிலியர்களுக்கு தொகுப்பூதிய முறையை ரத்து செய்துவிட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக கருப்பு பட்டை அணிந்து பணியாற்றி வந்த செவிலியர்கள், இன்று முதல் 3 நாட்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். சேலம் மாவட்டத்தில் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையில் இன்று காலை 7 மணிக்கு நர்சுகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வளர்மதி, மாவட்ட பொருளாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் சுதா பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.