அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா! புதிய கூட்டணியுடன் களமிறங்கும் கார்த்திக் சுப்புராஜ்!
அதர்வா, பிரபுதேவா, உபேந்திரா கூட்டணியில் கார்த்திக் சுப்புராஜ் புதிய படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா 2 போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘டோரதி’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜின் 10-வது படமான ‘டோரதி’-க்கு இளையராஜா இசையமைக்கிறார். நடிகர்கள் சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மதுரையை மையமாகக் கொண்டு புதுமையான கதைகளத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சில நாள்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில், திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்குத் தேர்வாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தனது 11-வது படமாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு ஒரு படத்தை கார்த்தி சுப்புராஜ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதர்வா, பிரபுதேவா மற்றும் உபேந்திரா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. புதுமையான கதைக்களத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் 2027 ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்படவுள்ளது.