Select Location
All Locations
State
Region
City / District
சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா தொடக்கம்:

சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா தொடக்கம்: ஆடி பிரதோஷத்தை முன்னிட்டு 12,000+ பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவில் முதல் நாளான இன்று பிரதோஷத்தை முன்னிட்டு 12 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா வழிபாட்டிற்காக ஆகஸ்ட் 10 முதல் 13-ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை திருவிழாவிற்கு தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருதால் மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகங்கள், வனத்துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை, தேனி, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறைக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 24 மணி நேரமும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாணிப்பாறை மலைப்பாதையில் அறநிலையத்துறை மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் 10 இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதல் நாளான இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு 12 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் நான்கு கால பூஜைகளுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாளை (செவ்வாய்க்கிழமை) சிவராத்திரி வழிபாடும், ஆகஸ்ட் 12-ம் தேதி புதன்கிழமை ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது. சதுரகிரி மலையில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தலைமையில், டிஐஜி அபிநவ் குமார், எஸ்.பிக்கள் தேவநாதன், கௌதம் கோயல் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Dinamani 1 hour ago
Home Flash News