இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் நிலைக்கு ஆளான ரஷியா.. என்ன நடந்தது? ...
இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் நிலைமைக்கு ரஷியா தள்ளப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா தனது சொந்த நாட்டின் பெட்ரோல் - டீசல் தேவைக்கு 90 சதவீதம் வெளிநாட்டு கச்சா எண்ணெய்யையே நம்பி உள்ளது. வெளிநாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வங்கி இங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் பெட்ரோல் - டீசல் தயாரிக்கப்பட்டு உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஈரான் போரினால் ஹார்முஸ் ஜலசந்தியில் நிச்சயமற்ற சூழலால் மத்திய கிழக்கில் இருந்து வர வேண்டிய கச்சா எண்ணெய் வரத்தில் தொய்வு நிலவுகிறது.
மேலும் அமெரிக்காவின் அழுத்தத்தால் ரஷியாவிடமிருந்தும் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கணிசமாக குறைத்தது. ஈரான் போரினால் சர்வதேச தட்டுப்பாடு ஏற்படக்கூடாது எனபதற்காக, அமெரிக்கா வழங்கிய தளர்வினால் தற்போது ரஷியாவிடம் கொள்முதலை இந்தியா அதிகரித்த நிலையில் தற்போது அதில் ஒரு சுவாரஸ்ய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நமக்கு கச்சா எண்ணெய் விற்கும் ரஷியா, நம்மிடம் பெட்ரோல் வாங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஆய்விதழான ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்தியாவின் நயாரா எனர்ஜி லிமிடட் நிறுவனத்திடம் இருந்து 43,000 பேரல் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்பட்டு ரஷியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் இதை உறுதோபடுத்தியுள்ளது. இந்தியாவிடம் ரஷியா பெட்ரோல் இறக்குமதி செய்வது இதுவே முதல்முறை ஆகும்.