விவசாயிகள் சோற்றுக்கு திண்டாடும்போது முதல்வருக்கு நவீன அறையா? இபிஎஸ் கேள்வி!
பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி கோரியும், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசு மெத்தனப் போக்குடன் இருப்பதாகவும்கூறி, தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தஞ்சாவூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ”ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். ஆனால், தவெக அரசு அதை செய்யவில்லை. ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரீல்ஸ் மட்டுமே போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். விவசாயிகள் பற்றி இந்த அரசுக்கு கவலையில்லை.
ஜூன் மாதத்தில் கர்நாடக அரசைத் தொடர்பு கொண்டு தண்ணீர் திறப்பது குறித்து பேசவில்லை. டெல்டா மாவட்டத்தில் மட்டும் ஐந்தரை லட்சம் ஏக்கரில் நடைபெறும் குறுவை சாகுபடி இந்தாண்டு செய்ய முடியவில்லை. இரண்டு லட்சம் ஏக்கருக்கு மும்முனை மின்சாரத்தை தவெக அரசு தரவில்லை. ஒரு லட்சம் ஏக்கர் தண்ணீர் இன்றி நிலம் கருகி காய்ந்துவிட்டது. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி பேரவையில் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை கண்டு கொள்ளவில்லை.