டெஸ்ட்டில் முச்சதங்கள் குறைந்ததற்கு டி20 கிரிக்கெட் காரணமா? ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?
டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதங்கள் அடிக்கப்படுவது குறைந்துவிட்டதற்கு டி20 கிரிக்கெட் காரணமா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் நாளை (ஆகஸ்ட் 15) முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், அதிரடியாக விளையாடும் டி20 கிரிக்கெட்டின் அணுகுமுறை பேட்டர்களின் பொறுமையை குறைத்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 கிரிக்கெட் அபார வளர்ச்சியடைந்துவிட்ட இந்த காலத்தில் இளம் தலைமுறை வீரர்களுக்கு கடந்த காலத்தில் விளையாடிய வீரர்கள் போன்று பொறுமை என்பது இல்லை. மிகவும் வெகு சிலரே டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் 250 அல்லது 300 ரன்கள் அடிக்கிறார்கள். ஏனெனில், வீரர்கள் பலவிதமான ஷாட்டுகளை விளையாடும்போது விரைவில் ஆட்டமிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதங்கள் அடிப்பதை மிகவும் அரிதாகவே பார்க்க முடிகிறது. கடந்த காலங்களில் பிரையன் லாரா, கிறிஸ் கெயில், வீரேந்திர சேவாக் மற்றும் மேத்யூ ஹைடன் போன்ற வீரர்கள் முச்சதங்கள் விளாசியுள்ளனர். பிரையன் லாரா 400 ரன்கள் எடுத்திருக்கிறார். ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் ஜாக் காலிஸ் மிகப் பெரிய இரட்டைச் சதங்கள் விளாசியுள்ளனர். ஆனால், தற்போது முச்சதங்களை மிகவும் அரிதாகவே பார்க்க முடிகிறது என்றார்.