தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள் ஆடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது: சென்னை பேரணியில் அண்ணாமலை பரபரப்பு பேச்சு
சென்னை: தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள் என்றும், ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்றும் அண்ணாமலை கூறினார். சென்னை எழும்பூரில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி கலந்துகொண்டனர். மேலும் தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி முடிவில் அண்ணாமலை பேசியதாவது: இந்திய ஜனாதிபதியாக அப்துல் கலாம் இருந்த போது நடிகர் விவேக்கிடம் 1 கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்று சொன்னார். அதை தனது முதல் வேலையாக விவேக் செய்தார். ஊட்டியில் இருந்து சென்னை வரையில் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் என மொத்தம் 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டார். மிச்சமுள்ள 63 லட்சம் மரக்கன்றுகளை தமிழக மக்கள் நட வேண்டும் என்று விட்டு சென்றுள்ளார். அந்த வகையில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் 20 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளோம்.
சேவை மனப்பான்மையோடு வருபவர்களால் தான் அடிப்படை அரசியல் கட்டமைப்பை உருவாக்க முடியும். நம்முடைய அமைப்பு ஆரம்பித்த 73 நாட்களில் 20 லட்சம் பேர் தன்னார்வலர்களாக சேர்ந்துள்ளனர். நம்முடைய இலக்கு 50 லட்சத்தை அடைந்தவுடன் மக்களுக்கான அரசியல் இயக்கமாக மாற்றுவோம். தலைவர்கள் டெல்லி, சென்னை கோட்டை, போயஸ்கார்டன், பனையூர், கோபாலபுரம் ஆகிய இடங்களில் இருந்துதான் முடிவெடுப்பேன் என்ற காலம் மாறிவிட்டது. ஒவ்வொரு முடிவையும் நகரத்தில் இருந்தும், கிராமத்தில் இருந்தும் தலைவர்கள் எடுக்க வேண்டும்.