இங்க நிறைய பேருக்கு சுகர் இருக்கு.. சமாளிக்க முடியல...” - ஓபிஎஸ் பேச்சால் சிரிப்பலை!
தமிழக சட்டமன்ற பேரவையின் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அது மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 4 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று (17.08.2026) கூடியது.
அப்போது, சுகாதாரத் துறை, வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அமைச்சர்கள் அருண்ராஜ், செங்கோட்டையன் ஆகியோர் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். அதனை தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பதிலுரை அளித்தனர். இதனால் இன்று காலை முதலே சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடந்தது.
இதில் பேசிய முன்னாள் முதல்வரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம், “காலை 9:30 மணிக்கு நமது சட்டமன்ற கூட்டம் ஆரம்பித்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் 3:30 மணியளவில் பேச ஆரம்பித்தார். இப்போது 3:52 மணி ஆகிவிட்டது. துறை பற்றிய அல்லது உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தான் அவரது பதிலுரை இருக்க வேண்டுமே தவிர, தேவையில்லாத பிரச்சனைகளை பற்றி பேசுகின்றனர். இங்கே நிறைய பேருக்கு சுகர் (Sugar) இருக்குங்க... நான் உட்பட அத்தனை பேரும் மயங்கி மயங்கி கீழே விழுகிறார்கள். பயங்கர வேதனையா இருக்கு..சமாளிக்க முடியல.. இல்லையென்றால் பதிலுரையை காலையில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று கிண்டலாகப் பேச அவையில் சிரிப்பலை எழுந்தது.