நீட் வேண்டாம் என நினைக்கும் மாநிலத்துக்கு முழு விலக்கு என்று சொன்னவர் ராகுல்: காங்கிரஸ்
நீட் வேண்டாம் என நினைக்கும் மாநிலத்துக்கு முழு விலக்கு அளிக்கப்படும் என்று, ராகுல் காந்தி உறுதியளித்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாணிக்கம் தாகூர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”சட்டப்பேரவையில் நீட் விவகாரம் குறித்து அமைச்சர் ராஜேஷ் குமார் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்! எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் மீது வீண் பழி போட்டு உங்கள் வரலாற்றுத் துரோகத்தை மறைக்க முடியாது! மறைந்த ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாத நீட் தேர்வு, நீங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து, அதிமுகவை பாஜகவின் காலடியில் அடகு வைத்த பிறகு 2017-ல் தான் தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது! தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து நீட்டை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது காங்கிரஸ் அல்ல, உங்கள் அடிமை ஆட்சிதான். இந்த வரலாற்று உண்மையை உங்களால் எப்போதும் மறைக்க முடியாது.
ஏழை, எளிய மாணவர்களின் நலனை முன்னிறுத்தித் திட்டங்களை யோசித்தாலும், மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முடிவுகளை மாற்றிக்கொள்ளும் இயக்கம் காங்கிரஸ். காலின் அளவுக்குத் தக்கபடிதான் காலணியைத் தைக்க வேண்டுமே தவிர, காலணிக்காக காலை வெட்ட முடியாது! ஆனால் பாஜக அரசோ ‘குரங்கு கையில் கிடைத்த பூமாலை’ போல, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் என்டிஏ( NTA) என்ற ஒரே அமைப்பிடம் கொடுத்து, வினாத்தாள் கசிவு, ஊழல், பயிற்சி மைய மாஃபியாக்கள் என நீட் தேர்வை வணிகச் சந்தையாக்கிவிட்டது.
அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்களின் உயிர்கள் பறிபோயும் ‘பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என மோடி அரசு பிடிவாதம் பிடிக்கிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உறுதியளித்தபடி, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தெளிவானது: "எந்த மாநிலத்திற்கு நீட் வேண்டாம் என்று நினைக்கிறதோ, அந்த மாநிலத்திற்கு முழு விலக்கு அளிக்கப்படும்." இதை உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜகவைச் சொல்ல வைக்க முடியுமா?