8 மணி நேர யாசகத்தில் ரூ.4,000 ‘வசூல்’ - யூடியூபர் வீடியோ வைரல்
பிரபல வழிபாட்டுதலமான ஹரித்வாரில் நடக்கும் காவட் மேளாவில் (Kawad Mela) யூடியூபர் ஒருவர் பிச்சை எடுத்து 8 மணி நேரத்தில் 4,000 ரூபாய் வசூல் செய்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
புருஷோதம் வசிஷ்ட் என்கிற அந்த யூடியூபர் தனது நண்பர் சச்சின் என்பவருடன் இணைந்து இந்த பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஹரித்வாரின் காவட் மேளாவில் பிச்சை எடுத்தால் ஒரு நாளில் எவ்வளவு கிடைக்கும் என்பதே அவர்களது பரிசோதனை முயற்சியின் நோக்கம்.
இதற்காக சச்சின் அழுக்கான முகம், கிழிந்த உடை என ஒரு பிச்சைக்காரரைப் போல தன்னை மாற்றிக் கொண்டு ஹரித்வாரின் பக்தர்கள் கூட்டத்தில் பிச்சை எடுக்கத் தொடங்குகிறார். அவர் தனது கழுத்தில் க்யூஆர் கோடு அட்டை ஒன்றையும் தொங்க விட்டிருந்தார்.
இந்த முயற்சியில் சிலர் ‘என்னிடம் எதுவும் இல்லை’ என அவரை நிராகரிக்க, மற்றவர்கள் தன்மையுடன் நடந்து கொள்கின்றனர். முதல் சில மணி நேரங்கள் வரை சச்சினின் முயற்சி ரூ.130 மட்டுமே ஈட்டி இருந்தது. தன்னுடைய பிச்சை எடுக்கும் வேலைக்கு இடையில், சச்சின் அங்குள்ள கடைக்காரர்கள், வியாபாரிகளுடன் உரையாடுகிறார். இதில் கண் காண்ணாடி விற்கும் வியாபாரி அவருக்கு ஒரு கண்ணாடியும் பரிசளிக்கிறார்.
இந்த நடைமுறையில் ஒரு பக்தர் சச்சினுக்கு டிஜிட்டல் பேமென்ட் மூலம் ரூ.40 தர்மம் செய்கிறார். தங்களது இந்த பரிசோதனை முயற்சியில், சுமார் ரூ.2,000 வரை கிடைக்கலாம் என நினைத்திருந்த புருஷோதம், சச்சின் இருவருக்கும் 8 மணி நேர முடிவில் வசூலாகி இருந்த தொகை ஆச்சர்யத்தையும், இன்ப அதிர்ச்சியையும் அளித்தது. அந்த நாளில் ரூ.4,000 அவர்கள் வசூல் செய்திருந்தனர்.
வழிபாடு, சுற்றுலா தலங்களில் பிச்சை எடுப்பது வாழ்வாதாரமாகவோ அல்லது ஒரு தொழிலாகவோ மாறி விட்டதோ என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனிடையே, யாசகம் பெறுவதை தொழிலாக செய்து வருபவர்களின் சிரமங்களையும் வலிகளையும் ஒருநாள் பரிசோதனை வீடியோ மூலம் வெளிப்படுத்தி விட முடியாது என சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.