கே.என்.நேரு கூட ரேஷன் அரிசி தான் சாப்பிடுறாரு...’; தவெக - திமுக இடையே காரசார விவாதம்!
தமிழக சட்டமன்ற பேரவையின் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அது மீதான பொது விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று (20-08-26) உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “கடந்த ஆட்சியில் முழுமையான பாதுகாப்பு அளித்து தூய்மையான அரசியை ரேஷன் கடையில் மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்கள். ரேஷன் கடையில் அரிசி வாங்குகிற அத்தனை பேரும் ஆட்டுக்கும் கோழிக்கும் தான் தீவனமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. அதற்காக தான் சன்னரக நெல்லை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த தொகையை முதல்வர் உயர்த்தி கொடுத்திருக்கிறார். அண்டை மாநிலங்களில் இருந்து அந்த அரிசி வருகிறது, பல இடங்களில் இருந்து வாங்கப்படுகிறது. நம்முடைய சன்னரக நெல் உற்பத்தி குறைவாக இருக்கிறது என்பது உண்மை. ஆகவே அதை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் அந்த பணிகளை மேற்கொண்டார்கள்” என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த முன்னாள் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூட அந்த ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறார். ஏனென்றால் அவர் சுகர் பேசண்ட், சுகர் கம்மியாக வேண்டும் என்பதற்காக அவர் ரேஷன் அரசிதான் சாப்பிடுகிறார்” என்று கூற அதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, “ரேஷன் அரிசியை எல்லா மக்களும் சாப்பிடுகிறார்கள். ரேஷன் அரிசி சாப்பிடுகிற போது சர்க்கரை அளவு குறைகிற காரணத்தால் எல்லா மக்களும் அதை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுந்து பேசுகையில், “கே.என்.நேருவிடம் ஆயிரக்கணக்கான விவசாய நிலம் இருப்பதாக முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். ஆனால் அவர் பரம ஏழையாக இருப்பது மாதிரி ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறார் என்று கூறுகிறார்” என்று கூற அவையில் சிரிப்பலை எழுந்தது.