தேர்தல் வழக்குகள்! நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல்!
தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, முதல்வர் விஜய்யின் வெற்றிக்கு எதிராக பெரம்பூரைச் சேர்ந்த வாக்காளர் தினேஷ் மற்றும் வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தாக்கல் செய்த வழக்கு மற்றும் விஜய்யின் வெற்றியை எதிர்த்து பெரம்பூர் தொகுதி வாக்காளர் லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை வரும் திங்கள்கிழமைக்கும் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.