சட்டப்பேரவை நேரலையில் மாற்றம் செய்ய திட்டம்: ஜேசிடி பிரபாகர் தகவல்
சென்னை: நீக்கப்பட்ட பகுதிகள் இல்லாமல் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் திமுக கொறடா எ.வ வேலு பேசும்போது, “சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதும் நேரலை செய்யப்படுவதால், அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகின்ற பகுதிகளை பத்திரிகைகள் போடாவிட்டாலும், சமூக வலைதளங்களில் பரவுகின்றன. இதனால் அவையின் மாண்பு போகிறது. உரிமை மீறல் குழு அமைப்பதற்கு முன்பாக அவையில் நீங்கள் இதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே 2 உரிமை மீறல் புகார்கள் அளித்துள்ளேன். அதை இப்போதே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்வதையே மதிக்கவில்லை என்றால் யார் சொன்னால் மதிப்பார்கள்?” என்றார்.
இதற்கு பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பதிலளித்து பேசுகையில், “உறுப்பினர் கூறுவது ஆய்வில் எடுத்துக் கொள்ளப்படும். இன்னொரு கருத்தும் வந்துள்ளது. இங்கிலாந்து, அமெரிக்காவில் நீக்கப்பட்ட அம்சங்கள் வெளியே வராமல் பேரவை நிகழ்வுகள் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழகத்திலும் நீக்கப்பட்ட பகுதிகள் இல்லாமல் நேரலை வழங்குவதற்காக ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.