படபடவெனப் பேசுவதற்காகவே பிரபலமானவர், நாடகக் கலைஞரும் யூடியூபருமான மாயா எஸ்.கிருஷ்ணன். தற்போது ஸ்டாண்ட்-அப் காமெடியிலும் களமிறங்கி கலகலப்பூட்டி வருகிறார். அண்மையில் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற அவருடைய நிகழ்ச்சியில் அரங்கம் நிறைந்திருந்தது. அந்த உற்சாகத்தில் இருந்தவர், தன் புதியப் பயணம் பற்றி மனம் திறந்தார்.
காமெடியில் ‘மெசேஜ்’ - யூடியூபில் ‘மஞ்சுளா டீச்சர்’ என்கிற கதாபாத்திரத்தை ஏற்று மாயா பதிவிடும் காணொளிகள் எல்லாம் வைரல் ரகம். அதே மஞ்சுளா டீச்சர் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ‘பொம்பளேல்’ என்கிற ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சிக்கான கதையை எழுதியிருக்கிறார் அவர்.
“பல ஆண்டுகளாக நாடகம், ரியாலிட்டி ஷோ என இயங்கி இருக்கிறேன். ஆனால், ஸ்டாண்ட்-அப் ஷோவை நடத்த வேண்டுமென்கிற ஆசை நீண்ட நாள்களாகவே இருந்தது. கடந்த பிப்ரவரியில் அதைப் பற்றித் தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன். ஜூன் மாதத்தில் ஷோ நடத்தப்போவதாக அறிவித்தேன். அறிவிப்பு வெளியானவுடன் மூன்று ஷோக்களுக்கான டிக்கெட்டுகளும் மளமளவென விற்றுத் தீர்ந்தன.
மக்கள் தந்த வரவேற்பைப் பார்த்ததும் முழு மூச்சாக ஸ்டாண்ட் - அப்பில் இறங்கிவிட்டேன். ஆறு நாள்களில் ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்துவிட்டு, அடுத்த ஆறு நாள்கள் ஒத்திகை பார்த்தேன். நண்பர்களிடம் நிகழ்ச்சியைச் செய்து காட்டியபோது, அவர்களுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது” என்று உற்சாகம் பொங்கப் பேசுகிறார் மாயா.
நகைச்சுவைக்கு என ஒரு ‘பவர்’ இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டுமென நினைக்கிறேன். இனி ஊர் ஊராகப் பயணப்பட்டு டூர் ஷோக்களை நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார் மாயா.