எஸ்.எஸ்.சிவசங்கர் : `மோசடி புகாரால் சட்டமன்றத்துக்கு ஆப்சென்டா?' - பின்னணி என்ன?
ஆளும் தவெக அரசின் நடவடிக்கைக்கு பயந்து சிவசங்கர் சட்டமன்றத் கூட்டத்தொடரில் பங்கேற்பதை தவிர்த்து ’சைலண்ட்’ ஆகிவிட்டதாக தகவல் பரவியது.
திமுக-வின் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர். இவர் தற்போது குன்னம் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், அரியலூர் மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் சில தினங்கள் மட்டுமே கலந்து கொண்ட சிவசங்கர் அதன் பிறகு கூட்டங்களில் பங்கேற்காதது அரசியல் வட்டத்தில் பேசு பொருளாகியிருக்கிறது.
போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக எழுந்த மோசடி புகாரில் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சிவசங்கருக்கு சம்மன் அனுப்பியது. இதைத்தொடர்ந்து அவரும் விசாராணைக்கு ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்நிலையில், ஆளும் தவெக அரசின் நடவடிக்கைக்கு பயந்து சிவசங்கர் சட்டமன்றத் கூட்டத்தொடரில் பங்கேற்பதை தவிர்த்து ’சைலண்ட்’ ஆகிவிட்டதாக தகவல் பரவியது. இதை மறுத்த சிவசங்கர் ஆதரவாளர்கள், திமுக தலைவர் ஸ்டாலினின் குட்புக்கில் இருக்கும் அண்ணன் சிவசங்கர் திமுக-வில் அடுத்த கட்டத்துக்கு செல்ல இருக்கிறார். இதை பொறுக்க முடியாத சில திமுக புள்ளிகளால் சிவசங்கர் தவெக அரசுக்கு பயந்து அமைதியாகி விட்டதாக கிளப்பி விடுவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், `தேர்தலுக்கு பிறகு, திமுகவில் எடுக்க வேண்டிய மறு சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்த குழுவில் சிவசங்கரும் இடம் பெற்றார். மறுசீரமைப்பு தொடர்பான கூட்டங்களில் கலந்து கொண்ட சிவசங்கருக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்தார். சட்டமன்றத்தில், சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான கேள்விகளை முன் வைத்து, ஆளும் கட்சியின் அவதூறுகளுக்கு ஆதார புள்ளி விவரங்களுடன் பதிலை துல்லியமாக எடுத்து வைத்து வந்தார்.