மாற்றுத் திறனாளிகளை தாக்கியது மனித உரிமை மீறல்: காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்புத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடிய மாற்றுத் திறனாளிகளுக்கு குடிக்க தண்ணீரோ, உணவோ வழங்காமல் அலைக்கழித்து, தாக்கி சித்ரவதை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் துறையின் செயலை வன்மையாக கண்டிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நாமக்கல்லில் பிப்ரவரி 17, 18 தேதிகளில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், கே.பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இடைக்கால பட்ஜெட்டிற்காக சட்டமன்ற கூட்டம் தொடங்க இருந்ததை முன்னிட்டு நேற்று (17.02.2026) சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்த சங்கம் திட்டமிட்டிருந்தது. காவல் துறை கேட்டுக்கொண்ட அடிப்படையில் சிவானந்தா சாலைக்கு இப்போராட்டம் மாற்றப்பட்டது.