Select Location
All Locations
State
Region
City / District
ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!

ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!

அந்நிய செலாவணியை சேமிக்கும் நோக்கில், திருமணத்துக்கு ஓராண்டுக்குத் தங்கம் வாங்கவேண்டாம்; பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

அந்நிய செலாவணியை சேமிக்கும் நோக்கில், திருமணத்துக்கு ஓராண்டுக்குத் தங்கம் வாங்கவேண்டாம்; பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா். மேற்காசியப் பிரச்னையின் பின்னணியில் பிரதமரின் இக்கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளன. தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா், ரூ.9,400 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து பேசியதாவது: இன்றைய சூழலில் பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை அதிகபட்ச சிக்கனத்துடன் பயன்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இப்பொருள்களை சிக்கனமாக பயன்படுத்தினால், அந்நிய செலாவணியை சேமிப்பதுடன், போரின் தாக்கங்களையும் குறைக்க முடியும்.

அந்நிய செலாவணியை சேமிக்க உதவும் வகையில், திருமணத்துக்குத் தங்கம் வாங்குவதை ஓராண்டு நிறுத்திவைக்க வேண்டும். வெளிநாட்டுப் பயணங்களையும் ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும். உலக அளவில் பெட்ரோல்-டீசல் விலை அதிக அளவு உயா்ந்துள்ளது. எனவே அவற்றின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். கரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணிபுரிவது, காணொலி வழியில் கூட்டங்களை நடத்துவது போன்ற வழக்கத்துக்கு நாம் அனைவரும் பழகினோம். இந்த வழக்கத்தை மீண்டும் தொடங்கி, அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது தற்போது மிகவும் அவசியம். பெட்ரோல்-டீசலை வீணாக்காமல் சேமிப்பதன் மூலம், அவற்றை வாங்குவதற்கு செலவிடப்படும் அந்நிய செலாவணியை சேமிக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும்.

மேற்கு ஆசிய போா் காரணமாக பெட்ரோல், உரங்களின் விலை உயா்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு சாத்தியமான எந்தவொரு வழியிலும் நாம் அந்நிய செலாவணியை சேமித்தாக வேண்டும். முன்பு 100 சதவீத எல்பிஜி பரவலாக்கத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தியது. இப்போது குழாய் வழி எரிவாயு (பிஎன்ஜி) விநியோகத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. சூரிய மின் உற்பத்தியில் கடந்த சில ஆண்டுகளில் உலகின் முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றாா் அவா். இந்நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநா் சிவ பிரதாப் சுக்லா, முதல்வா் ரேவந்த் ரெட்டி, மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாட்டின் முதல் ஜவுளி பூங்கா திறப்பு: மத்திய அரசின் மித்ரா திட்டத்தின்கீழ், தெலங்கானா மாநிலம், வாரங்கல்லில் ரூ.1,695 கோடியில் கட்டமைக்கப்பட்ட நாட்டின் முதலாவது ஜவுளி பூங்காவை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். தமிழகம், தெலங்கானா, கா்நாடகம் உள்பட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்கா திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், தெலங்கானாவின் வாரங்கல்லில் 1,327 ஏக்கரில் கட்டமைக்கப்பட்ட ஜவுளி பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இந்திய ஜவுளித் துறை வளா்ச்சிக்கு உத்வேகமளிக்கும் இந்தப் பூங்கா ரூ.6,000 கோடி முதலீடுகளை ஈா்க்கும்; 24,400-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய ஜவுளித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Dinamani 1 hour ago
Home Flash News