Select Location
All Locations
State
Region
City / District
தமிழ்நாட்டின் 126 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் - முதலிடத்தில் முதலமைச்சர் விஜய்யின் தவெக!

தமிழ்நாட்டின் 126 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் - முதலிடத்தில் முதலமைச்சர் விஜய்யின் தவெக!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 126 உறுப்பினர்கள்மீது, குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்களின் குற்றவியல் பின்னணி, நிதி நிலை, கல்வித் தகுதி மற்றும் பாலினம் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து இந்த அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் இந்த தரவு தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் தமிழக வெற்றிக் கழகம் முதலிடம் பிடித்துள்ளது. அந்தக் கட்சியைச் சேர்ந்த 41 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் 56 பேர் தங்கள்மீது கடுமையாக குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதிலும் தவெக முதலிடம் பிடித்துள்ளது.

தவெகவைச் சேர்ந்த 19 பேரும், அதிமுக மற்றும் திமுக கட்சிகளைச் சேர்ந்த தலா 14 பேரும், காங்கிரஸ் மற்றும் பாமக கட்சிகளைச் சேர்ந்த தலா இரண்டு பேரும், அமமுக, சிபிஐ, தேமுதிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விசிக கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவரும், தங்களுக்கு எதிராகக் கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அறிவித்துள்ளனர். இவற்றில் கொலை, கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவை அடங்கும். மேலும் இத்தேர்தலில் அதிக அளவிலான கோடீஸ்வர உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். 233 உறுப்பினர்களில் 193 பேர் கோடீஸ்வரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்களின் மொத்த அறிவிக்கப்பட்ட சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 11,265 கோடியாக உள்ளது. ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக 59 இடங்களுடனும், அதிமுக 47 இடங்களுடனும் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.


Malaimalar 46 minutes ago
Home Flash News