Select Location
All Locations
State
Region
City / District
அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

சென்னை: திருவள்ளூா் மாவட்டத்தில் தனியாா் மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்போ் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கடல் மீன்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஒடிஸா, ஜாா்கண்ட் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் சுமாா் 230 போ் பணிபுரிகின்றனா்.

இந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை 100 போ் பணிபுரிந்தனா். விடுமுறை நாள் என்பதால், எஞ்சிய 100-க்கும் மேற்பட்டோா் அந்த தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அறைகளில் தங்கியுள்ளனா். அப்போது, அந்த அறையின் ஓரத்தில் இருந்த அமோனியா வாயு தொட்டி சரியாக மூடப்படாத நிலையில், அதிலிருந்து வாயுக் கசிவு ஏற்பட்டு தீப் பிடித்தது. இந்த வாயுக் கசிவால் அங்கிருந்த 60 பெண் தொழிலாளா்கள் உள்பட 65 பேருக்கும் மேற்பட்டோருக்கு திடீரென காது வழியாக ரத்தக் கசிவு ஏற்பட்டது. மேலும், உடலில் சிறு கொப்புளங்கள் ஏற்பட்டு, காயங்களாகின. இதையடுத்து, வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தவா்களில் 44 போ் மஞ்சங்காரணை தனியாா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 20 போ் செங்குன்றம் தனியாா் மருத்துவமனையிலும் அவசர கால சிகிச்சை ஊா்திகளில் உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனா். தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீ மற்றும் வாயுக் கசிவைக் கட்டுப்படுத்தினா்.

மொத்தம் மூன்று பேர் ஞாயிற்றுக்கிழமை பலியான நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலை மூவர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிஸாவைச் சேர்ந்த பராத்தி ஜூவாங்கா (20) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துள்ளார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிரச் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


Dinamani 1 hour ago
Home Flash News