“கனிம வளங்களைப் போல விவசாய நிலங்களையும் பாதுகாக்க சட்டம் தேவை” - வேல்முருகன்
சென்னை: “தமிழக அரசு கனிம வளங்களை பாதுகாக்க எடுத்துள்ள கொள்கையைப் போலவே, பிற மாநிலங்களின் திட்டங்களுக்காக தமிழகத்தின் விவசாய நிலங்களை கையகப்படுத்தவோ, சேதப்படுத்தவோ கூடாது என்ற, தெளிவான கொள்கை முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்,” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் உரிமையான காவிரி நீரைக் கூட திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு, தமிழகத்தின் வளமான விவசாய நிலங்களை அழித்து எண்ணெய் குழாய் அமைத்துக் கொடுக்கும் அநீதியைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழகத்தின் உரிமைகளை மதிக்காத மாநிலங்களின் தேவைகளுக்காக, தமிழகத்தின் இயற்கை வளங்களையும், விவசாய வளங்களையும் பலியிடும் போக்கு இனியும் தொடர அனுமதிக்க முடியாது. தமிழக அரசு, மாநிலத்தின் கனிம வளங்கள் கட்டுப்பாடின்றி பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதை தடுத்து, தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதே கொள்கை, அதே உறுதி, அதே பாதுகாப்பு விவசாய நிலங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.