"அடிப்படைப் புரிதல் இல்லாத கூட்டம் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது!"- வெளுத்து வாங்கும் வேல்முருகன்
நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, கரப்பான் ஜனதா கட்சியினர் நாடுமுழுக்க நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் சென்னையில் அவர்களது கட்சித் தலைமை அலுவலகத்திலேயே தொடர் போராட்டம் நடத்தி ஊடக கவனம் பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகனிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்...
"நீட் தேர்வு விவகாரத்தில், 'தேர்வை ரத்து செய்வதுதான் நிரந்தரத் தீர்வு. மற்ற கோரிக்கைகள் முழு பலனைத் தராது' என்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் கருத்தை வரவேற்கிறீர்களா?"
வெளிநாட்டில் உள்ள ஓர் இளைஞர் இந்தியா வந்து, நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து புதிதாக ஓர் இயக்கத்தை வழிநடத்தி மத்திய பா.ஜ.க அரசுக்கு நெருக்கடி கொடுத்து பணிய வைக்க முடியும் எனில், ஒரு கோடியே 20 லட்சம் வாக்குகளைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக இருக்கின்ற தி.மு.க., நீட் தேர்வு ரத்தை வலியுறுத்தி தமிழ்நாட்டில் ஒரு மாபெரும் போராட்டத்தை ஏன் நடத்தவில்லை? அவர்களைத் தடுத்தது யார்? அதுதான் என் கேள்வி!"
"தி.மு.க-வை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்புகிற நீங்கள், காங்கிரஸ் கட்சி ஏன் அகில இந்திய அளவில் போராட்டம் நடத்தவில்லை என ஏன் கேட்கவில்லை?"
'இந்தி திணிப்பு'க்கு எதிராக கடந்த காலத்தில் மிகச்சிறப்பான போராட்டங்களை நடத்திய வரலாறு தி.மு.க-வுக்கு உண்டு. இவ்வளவு பெருமைமிக்க தி.மு.க., நேற்று ஆரம்பிக்கப்பட்ட காக்ரோச் கட்சி போராட்டத்துக்கு தனது மாணவர் அணியையும் எம்.பி-யையும் அனுப்பி பேசவைக்கிறபோதுதான், ஏன் நீங்களே தன்னிச்சையாக போராட்டத்தை முன்னெடுக்கவேண்டியதுதானே என நான் தி.மு.க-வை நோக்கி கேள்வி எழுப்புகிறேன்."