எங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்
திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட் உரையில் அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார். தவெக அரசின் 2026 -2027 ஆம் நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரியவில்சன் பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
அப்போது பேசுகையில் "நேர்மையான, வெளிப்படையான மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலான சரக்கு மற்றும் சேவை வரி (GST) நிர்வாகத்தை வழங்குவதில் இந்த அரசு உறுதியுடன் உள்ளது. நேர்மையாக வரி செலுத்துவோரை மாநிலத்தின் வளர்ச்சியில் உண்மையான பங்களிப்பாளர்களாகக் கருதி, அவர்கள் வணிகம் செய்வதை மேலும் எளிதாக்கும் வகையில், வணிக வரிகள் துறை சேவை சார்ந்த தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் மற்றும் நேரில் சந்திக்கத் தேவையில்லாத (Faceless) அணுகுமுறையை நோக்கிச் செல்லும். அதேவேளையில், திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்வோர் மீது மட்டுமே உளவுத் தகவல்கள் அடிப்படையிலான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொது ஆவணக் காப்பகமாகப் பதிவுத் துறை ஆற்றும் முக்கியப் பணியினை கருத்திற்கொண்டு ஆவணங்களைத் தடையின்றியும், எளிமையாகவும் பதிவு மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் அரசு சிறப்பான சீர்திருத்தங்களை முன்னெடுப்பு செய்துள்ளது. பொதுமக்களின் வசதிக்காக மின் - புத்தாக்கத்தை (digital innovation) முன்னிறுத்தி சொத்துப் பதிவை எளிதாகவும், ஊழலற்றதாகவும் மாற்றுவதற்கு இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. நிலம் வாங்கும் பொதுமக்களை மோசடிப் பதிவுகளிலிருந்து பாதுகாப்பது அரசின் தலையாய கடமையாகும்.