Select Location
All Locations
State
Region
City / District
LIVE
ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் தரமான கோதுமை மாவு! பட்ஜெட்டில் தகவல்

ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் தரமான கோதுமை மாவு! பட்ஜெட்டில் தகவல்

பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் பொட்டலமிடப்பட்ட தரமான கோதுமை மாவு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார். தவெக அரசின் 2026 -2027 ஆம் நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மரியவில்சன் பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அவர் பேசுகையில் "மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளிம்புநிலையில் வாழும் சமூகத்தினருக்கு, பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களை முன்னுரிமை அடிப்படையில் அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்தை இந்த அரசு விரிவுபடுத்தி செயல்படுத்தும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்த நிதியாண்டில் 7.18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் உரிய அளவிலும், தரமான முறையிலும் பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், இந்த ஆண்டில் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் பொட்டலமிடப்பட்ட கோதுமை மாவு வழங்கும் முன்னோடித் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும்.

இம்முன்னோடித் திட்டத்திற்காக 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. இத்திட்டம் பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். உணவு மானியத்திற்காக இந்த அரசு 14,000 கோடி ரூபாய் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்கிறது. இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 14,830 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.


Dinamani 37 minutes ago
Home Flash News